அதிகரிக்கும் படை பலம்! 190 அணு ஆயுதம் கைவசம்!! ஆயுதங்கள் இறக்குமதியில் 2வது இடம்! கெத்து காட்டும் இந்தியா!
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளது என சர்வதேச அமைப்பு கணித்து உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் கடந்த ஆண்டு வைத்திருந்த 170 அணு ஆயுதங்களே இந்தாண்டும் வைத்து உள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், இந்தியாவிடம் தற்போது 190 அணு ஆயுதங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 180 ஆக இருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 10 அதிகரித்துள்ளது. இவற்றில் 12 அணு ஆயுதங்கள் போர்க்களத்துக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 178 அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் பாகிஸ்தானிடம் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 170 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளதாக SIPRI கூறியுள்ளது. இந்திய அணு ஆயுதங்கள் விமானங்கள், நிலம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாயிலாகவும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!
SIPRI அறிக்கையின்படி, உலகில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. 2025-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ செலவு 8.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.9 சதவீதம் அதிகமாகும். அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
மேலும், உலக அளவில் அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2 சதவீதமாக உள்ளது. பாகிஸ்தான் 4.2 சதவீதம் இறக்குமதி செய்துள்ளது.
SIPRI 1966-ம் ஆண்டு முதல் உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான போக்குகளை கண்காணித்து வரும் முக்கிய சர்வதேச நிறுவனமாகும். இந்த அறிக்கை உலக நாடுகளின் அணு ஆயுத வலிமை மற்றும் ராணுவ செலவு குறித்த தெளிவான பார்வையை அளிக்கிறது.
இந்தியா தனது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அணு ஆயுத திறனை அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், பாகிஸ்தானின் அணு ஆயுத எண்ணிக்கை நிலையான நிலையில் உள்ளது. இந்த அறிக்கை இந்திய-பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு சூழலை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை மீறல்! இந்தியா கடும் கண்டனம்!