எபோலோ வைரசால் நொறுங்கிப்போன ஆப்ரிக்கா! காங்கோவுக்கு மருந்துகள் அனுப்பி உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா அவசரகால மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் உலகளவில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகளை அதிகரித்து வரும் இந்த கொடிய நோய்க்கு எதிராக போராடும் காங்கோவுக்கு இந்தியா அவசர மருத்துவ உதவிகளை அனுப்பி ஆதரவு அளித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக எபோலா தொற்று தீவிரமடைந்து வருவதால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. நோய் மேலும் பல நாடுகளுக்கு பரவக்கூடும் என்ற அச்சத்தால், உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில், காங்கோவில் நடைபெற்று வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியாக இந்திய அரசு அவசரகால மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் எபோலா..!! 21 நாட்கள் தனிமை கட்டாயம்..!! அதிரடி காட்டும் கனடா..!!
இதில் நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சை மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொற்று கட்டுப்பாட்டு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பொருட்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், எபோலா பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியா வழங்கிய உதவிக்கு அந்த அமைப்பு நன்றியும் தெரிவித்துள்ளது. உலக சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதாகவும் பாராட்டியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கிய இந்த அவசர உதவி, காங்கோவில் சிகிச்சை மற்றும் உயிர் காப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.
எபோலா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பே முக்கியம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!