×
 

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்..!! அதிரடி காட்டும் ஈரான்..!!

திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், ஈரான் தனது நட்பு நாடுகளை குறிவைத்து பதிலடி தாக்குதல்களை நடத்தியது.

மேலும், உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

உலக அளவில் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால், ஈரானின் நாகரிகம் முழுவதும் அழிக்கப்படும் என்றும், அதிலிருந்து மீண்டு வர முடியாது என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

இந்த காலக்கெடு நேற்று முடிவுக்கு வந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் தலையீட்டில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோரின் முயற்சியால், இரு தரப்பும் இரு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதன்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்பில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.

ஈரானும் ஜலசந்தியை மீண்டும் திறந்து, கப்பல்கள் சாதாரண போக்குவரத்தைத் தொடங்க அனுமதித்தது. இதனால் ஆசிய நாடுகளில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு சற்று தணியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இருப்பினும், ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில் பார்ஸ் மாகாணம் லார் நகரின் வான்வெளியில் இஸ்ரேலின் ஹெர்ம்ஸ் 900 ரக ட்ரோன் பறந்ததாகவும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) நவீன வான்பாதுகாப்பு அமைப்பால் அதை இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதியது. ராணுவ நடவடிக்கைக்கு அப்பாற்பட்டாலும், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் விமானங்கள் அல்லது ட்ரோன்கள் ஈரான் வான்வெளிக்குள் நுழைவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதன் விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இது மீண்டும் உலகளாவிய எரிபொருள் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஈரான் இந்த நிலைப்பாட்டை மறுத்து, ஹிஸ்புல்லா உள்ளிட்ட தனது ஆதரவு போராளிக் குழுக்களுக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதனால் லெபனானில் மீண்டும் பதற்றம் அதிகரித்து, பிராந்திய அமைதி முயற்சிகள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த சூழலில், உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன. எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார பாதிப்பு ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தியா எதிர்பார்க்கின்றன. போர் நிறுத்தம் நீடிக்குமா அல்லது மீண்டும் மோதல் வெடிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும். 
 

இதையும் படிங்க: நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share