×
 

இஸ்ரேலுக்கு "SPY" வேலை.. 3 பேருக்கு தூக்கு தண்டனை.. அதிரடியில் இறங்கிய ஈரான்..!

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது ஈரான்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரானது என இஸ்ரேல் அப்போது தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவமும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில் தான், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் களமிறங்கியது. அந்த வகையில் ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பேரழிவு காத்திருப்பதாக எச்சரித்த ஈரான், இஸ்ரேலும் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், அந்த தவறுக்கான தண்டனை தொடரும் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து ஈரான் கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி நேற்று தீவிர தாக்குதல் நடத்தியது. இதனிடையே டிரம்ப் அவசர அவசரமாக தனது ட்ரூத் சோஷியல் மீடியா பதிவில், 24 மணி நேரம் ஒவ்வொரு கட்டமாக போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும், இன்று நள்ளிரவில் முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்றும் பதிவிட்டிருந்தார். 

இதையும் படிங்க: தொடரும் போர் பதற்றம்.. காசாவில் கொத்து கொத்தாக மடியும் மக்கள்.. பலி எண்ணிக்கை 56,000ஆக உயர்வு..!

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும், மீண்டும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் வழியாக இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தன. ஆனால், போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

போர் நிறுத்த‌த்திற்கு ஈரானும் இஸ்ரேலும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அதிகாலை அறிவித்தார். ஆனால், அதன் பின்னர், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேலும், இஸ்ரேலின், பீர்ஷேபா பகுதியில் ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டன.

போர் நிறுத்த‌ அறிவிப்பை மீறும் வகையில் ஈரான் தாக்கியதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்த‌து. அதே நேரத்தில், போர் நிறுத்த‌த்தை மீறி, ஈரான் வான்பரப்பை அத்துமீறி இஸ்ரேல் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது. மேலும், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், போர் மீண்டும் மூளும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்த‌து.

இதனிடையே, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக பல பேரை கைது செய்து எந்தவித விசாரணையும் இன்றி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை ஈரான் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இஸ்ரேலுடனான மோதலின் போது கடந்த 10 நாட்களில் உளவு பார்த்ததாக ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் 3 பேருக்கு ஈரான் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. 

அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி, ரசுல் அகமது ரசுல் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த 10 நாட்களில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் மொத்தம் 6 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

இதையும் படிங்க: தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. நிலவும் போர்ப்பதற்றம்.. இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share