தொடர்ந்து அநியாயம் செய்யும் இஸ்ரேல்.. காசாவில் உணவு வாங்க முண்டியடிக்கும் அவலம்..!
இஸ்ரேலின் மனிதநேயமற்ற செயலால் காசாவில் மக்கள் உணவுக்காக பரிதவித்து வருகின்றனர்.
பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 4-வது தலைவனும் அவுட்.. ஹமாஸ் புதிய தலைவனை தீர்த்துக்கட்டியது இஸ்ரேல்! நெதன்யாகு வெளியிட்ட அப்டேட்!
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்பட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த 23ம் தேதி காசாவில் கான் யூனிஸ் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், ஹமாதி அல் நஜ்ஜர் என்ற மருத்துவரின் 10 குழந்தைகளில் 9 பேர் உயிரிழந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 9 குழந்தைகள் ஒரு வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், 77 சதவிகித பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேலின் இந்த மனிதநேயமற்ற செயலால் காசாவில் மக்கள் உணவுக்காக பரிதவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலர்களை துளைத்த துப்பாக்கி தோட்டா! இஸ்ரேல் ஊழியர்கள் மீது காசா ஆதரவாளர் நிகழ்த்திய கொடூரம்..!