கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..
ஈரான் அதி உச்ச தலைவர் கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.
அணு ஆயுத தயாரிப்பை கைவிட மறுத்து வந்த ஈரான் மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆயுத கூடங்களை குறி வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில், ஈரானின் பல ராணுவ தளபதிகள், பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக போர் தொடர்ந்த நிலையில், ஞாயிறன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது.
ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக செவ்வாயன்று இரவு கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அடி! போர் முடிந்து முதன்முறை வாய் திறந்த காமெனி..
இதனால் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், புதனன்று இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது. போர் முடிவு பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை முதலில் நிராகரித்த ஈரான், பின்னர் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. தாக்குதல் தொடங்கிய 13ம் தேதியே ஈரானின் உச்ச தலைவர் கமெனியும் அவரது குடும்பத்தினரும் அவசர அவசரமாக ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
போர் முடிந்து 3 நாட்களாகியும் கமெனி பற்றிய தகவல் இல்லாததால் அவர் எங்கே என மக்கள் கேட்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;
கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம். இதனை அறிந்து கொண்ட அவர், நிலத்துக்கு அடியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கினார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதில் வந்தவர்களுடனான தொடர்பையும் அவர் துண்டித்து கொண்டார்.
இதனால், எங்களது முயற்சி சாத்தியம் இல்லாமல் போனது.போரின் போது, தீவிரமாக அவரை தேடினோம். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. தலைமையை மாற்றுவதே நோக்கம். கமேனியை கொல்வதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏதும் தேவையில்லை என்றும் காட்ஸ் கூறினார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!