போர் நிறுத்தத்திற்கு சம்மதம்.. ஆனால்..! ஈரானுக்கு இஸ்ரேல் போட்ட கண்டிஷன்..!
ஈரானின் அணுசக்தி, பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவரும் இஸ்ரேலின் இலக்கை அடைய உதவிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத தயாரிப்பை கைவிட மறுத்து வந்த ஈரான் மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆயுத கூடங்களை குறி வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில், ஈரானின் பல ராணுவ தளபதிகள், பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ஒரு வாரமாக போர் தொடர்ந்த நிலையில், ஞாயிறன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்ததால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக நேற்றிரவு கத்தார் நாட்டில் தோஹா அருகே உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.
இந்த சூழலில் தான் பரபரப்பு திருப்பமாக, இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் செய்ய முடிவுக்கு வந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நள்ளிரவில் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், டிரம்ப் அறிவிப்பை ஈரான் உடனடியாக நிராகரித்துது. டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர்கள் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: மீட்பு விமானத்துக்கு அருகே பறந்த மிசைல்.. நாடு திரும்பிய மக்களின் திகில் அனுபவம்..!
தாக்குதலால் பதற்றம் அதிகரித்த நிலையில், புதிய திருப்பமாக போர் நிறுத்தம் இன்று காலை அமலுக்கு வந்து விட்டதாக ஈரான் அரசு டிவி அறிவிப்பு வெளியிட்டது. டிரம்ப் வெளியிட்ட போர் நிறுத்த அறிவிப்பில், 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் என கூறியிருந்தார்.
அதன்படி 6 மணி நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்ததை உறுதி செய்தது. இந்நிலையில் அமெரிக்கா மத்தியஸ்தத்தின் பேரில் ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி, பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவரும் இஸ்ரேலின் இலக்கை அடைய உதவிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால், ஈரான் கடுமையான பதிலடியை சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் கடந்த 12 நாளாக நீடித்த உச்சக்கட்ட பதட்டம் முடிவுக்கு வந்துள்ளது..
இதையும் படிங்க: ஈரான் அடிபணியும் நாடு இல்லை! போர் நிறுத்தம் போங்கா? கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த காமெனி..!