பதற்றமான சூழலிலும் மீண்டும் தொடங்கிய விமான சேவை..!! இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கம்..!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது குறைந்த அளவு விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான தீவிர மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்றம் உலக விமானப் போக்குவரத்தை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் வான்வெளி மூடப்பட்டதால், பெரும்பாலான விமானச் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமான நிலையங்களிலும் ஹோட்டல்களிலும் சிக்கிக் கிடந்தனர்.
இந்நிலையில், தற்போது சில நாடுகளில் வான்வெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், குறைந்த அளவிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இது பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
ஈரானின் பதிலடித் தாக்குதல்களால் துபாய் சர்வதேச விமான நிலையம் இரண்டு முறை தாக்கப்பட்டது. இதில் நான்கு பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து UAE உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை முன்னெச்சரிக்கையாக மூடின. இதனால் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையம் முடங்கியது.
இதையும் படிங்க: ஈரான் வான்வழி மூடல்: சென்னை விமான நிலையத்தில் 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!
இதேபோல் அபுதாபி, தோஹா போன்ற முக்கிய ஹப்களும் பாதிக்கப்பட்டன. இந்த நெருக்கடியால் ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் 357 விமானங்களை ரத்து செய்தன. ஆனால் தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. அபுதாபியில் இருந்து எத்தியாட் ஏர்வேஸ் விமானம் EY216 நேற்று பிற்பகல் 3:42 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:31 மணிக்கு டெல்லியில் தரையிறங்கியது. இது முதற்கட்ட நிவாரண விமானமாக அமைந்தது.
மேலும், மூன்று மணி நேரத்திற்குள் 15க்கும் மேற்பட்ட எத்தியாட் விமானங்கள் அபுதாபியில் இருந்து புறப்பட்டு சிக்கிய பயணிகளை வெளியேற்றின. துபாய் சார்ந்த ஃபிளைதுபாய் நிறுவனம் இன்று முதல் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கத் தொடங்கும் என அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனமும் வரையறுக்கப்பட்ட சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தகுதியானவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள உள்ளதாகவும் எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் 'Manage Your Booking' பிரிவில் தங்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலைமை மேம்படும் வரை விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனம், "பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மை முன்னுரிமை" என வலியுறுத்தியுள்ளது. அபுதாபி விமான நிலையமும் நேற்று பிற்பகல் முதல் பகுதியளவு சேவைகளை தொடங்கியுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று முதல் டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை, திருச்சி ஆகிய இடங்களுக்கு சேவைகளை மீண்டும் தொடங்குகிறது.
மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கான முதல் விமானம் உள்ளூர் நேரப்படி காலை 10:25 மணிக்கு புறப்பட்டது. ஆனால் பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் செல்லும் சேவைகள் இன்று இரவு வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான விமானச் சேவைகள் இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, படிப்படியாக சேவைகளை அதிகரிக்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த மோதல் உலக அளவில் பயணிகளை பாதித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க: தி கேரளா ஸ்டோரி 2 ..! தடை பண்ணலனா அவ்ளோ தான். சீமான் எச்சரிக்கை..!!