×
 

"ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) போலிச் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்து மாபெரும் பேரணி நடத்திய பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலிஸார் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்டமாகத் தொடங்கவுள்ள நிலையில், அங்குள்ள 12 அகதிகள் இடஒதுக்கீட்டுத் தொகுதிகளை ரத்து செய்யக் கோரியும், பாகிஸ்தான் அரசின் பொருளாதாரச் சுரண்டலைக் கண்டித்தும் பொதுமக்கள் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் கூட்டமைப்பு அவாமி நடவடிக்கைக் குழுவின் (JAAC) சார்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணித்து ராவலாகோட்டிலிருந்து தலைநகர் முசாபராபாத் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.

அப்போது பேரணியைத் தடுத்து நிறுத்த முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிப் பாகிஸ்தான் படையினர் நடத்தியத் தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!

இச்சம்பவம் குறித்துப் போராட்டக் குழுவினர் தெரிவிக்கையில், "அமைதியான முறையில் பேரணி சென்ற மக்கள் மீது பாகிஸ்தான் அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி அராஜகத் தாக்குதலை நடத்தியுள்ளது. எங்கள் நிலப்பரப்பில் உரிமைகளுக்காகப் போராடுபவர்களைப் தீவிரவாதிகள் என முத்திரை குத்திப் பாகிஸ்தான் அரசு கொன்றுகுவிக்கிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் தேர்தலைத் "தேர்தல் நாடகம்" எனச் சாடியுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், "பாகிஸ்தானின் பல தசாப்தகாலப் பொருளாதாரச் சுரண்டல், அடிப்படை உரிமைகள் மறுப்பு மற்றும் நிர்வாக ஒடுக்குமுறை ஆகியவற்றின் நேரடி விளைவே இந்த மக்கள் போராட்டங்கள். பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கவே இத்தகைய நாடகங்களை நடத்துகிறது" என மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுப் பதற்றம் உச்சமடைந்துள்ளது.

 

இதையும் படிங்க: "நான் மினிஸ்டருக்கு சொந்தம்"..! கேனில் பெட்ரோல் தராத ஆத்திரம்..! ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share