×
 

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடிப் பேச்சுவார்த்தை 10 போர்களை நிறுத்திவிட்டேன் என ட்ரம்ப் பெருமிதம்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் தற்காலிகப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 16 மாலை 5:00 மணி (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) முதல் இந்தத் துப்பாக்கிகள் முழக்கமற்ற அமைதி காலம் தொடங்கியுள்ளது.

அதிபர் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் ஆகியோரிடையே நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை, சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு (1993-க்குப் பிறகு) இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடித் தொடர்பாகும். போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, முறையான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இரு நாட்டுத் தலைவர்களையும் வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் அழைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தனது தூதரக ரீதியான வெற்றியைக் குறித்துக் குறிப்பிடுகையில் உலகம் முழுவதும் இதுவரை 9 போர்களை நான் தீர்த்து வைத்துள்ளேன். இது நான் நிறுத்தியுள்ள 10-வது போர் ஆகும். அமைதியை நிலைநாட்டுவதே எமது நோக்கம் எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

இந்த 10 நாள் அவகாசத்தை ஒரு வாய்ப்பாகக் கருதுவதாகவும், அதேசமயம் ஹெஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். லெபனான் பிரதமர் நவாப் சலாம் இந்த ஒப்பந்தத்தை முதன்மையான தேசிய இலக்கு என வரவேற்றுள்ளார்.

கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா இடையே மீண்டும் தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர் லெபனானில் உயிரிழந்துள்ளனர். 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த 10 நாள் இடைவேளை நிவாரணப் பணிகளுக்கும், மக்கள் தங்களது இடங்களுக்குத் திரும்பவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் அடங்கிய குழு, இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தத்தை நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இஸ்ரேல் - லெபனான் போர்: 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; லெபனான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share