ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!
'ஈரான் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா?' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தேகம் எழுப்பிய நிலையில், கமேனி கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.
தெஹ்ரான்: அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில், ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சந்தேகத்தை பகிரங்கமாக எழுப்பிய சில நாட்களுக்குப் பிறகு, மொஜ்தபா கமேனி கைப்பட எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.
போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மேற்காசிய போர்! முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ வேண்டும்!! கோரிக்கை விடுத்த ஈரான்!
ஆனால், அதே தாக்குதலில் மொஜ்தபாவும் படுகாயம் அடைந்ததாகவும், ரகசிய இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதுவரை அவர் பொதுவெளியில் நேரடியாகத் தோன்றவில்லை. அவரது செய்திகள் அறிக்கை வடிவிலோ அல்லது ஆடியோவாகவோ மட்டுமே வெளியாகி வருகின்றன.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரானுடன் பேச்சு நடத்துகிறோம். ஆனால் அது புதிய உச்சத் தலைவருடனா என்பது தெரியவில்லை. ஏனெனில் அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மொஜ்தபா கமேனி கைப்பட எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அதில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக நின்ற ஈராக் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி.
ஈரான் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஈராக்கின் ஷியா மதத் தலைவர் அயதுல்லா அலி சிஸ்தானிக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் ஈரான் ஊடகங்களில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும், மொஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றாதது சந்தேகங்களை அதிகரித்துள்ளது. ஈரான் அரசு அவரது நிலை குறித்து முழுமையான தகவல்களை வெளியிடாததால், அவர் காயத்திலிருந்து மீண்டு வருகிறாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், இந்தக் கடிதம் மூலம் மொஜ்தபா கமேனி இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக ஈரான் தரப்பு சமிக்ஞை அளித்துள்ளது. மேற்காசியப் போர் தொடரும் நிலையில், ஈரானின் தலைமைப் பொறுப்பு மற்றும் போர் உத்திகள் குறித்த எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி சன்மானம்! தந்தைக்கு அடுத்து மகனுக்கும் குறி! அமெரிக்கா அறிவிப்பு!