×
 

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்... தவிக்கும் குடும்பங்கள்..! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.!

நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பொருட்டு முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார். நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் துயரச் செய்தி தமிழகத்தை உலுக்கியது. ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்தப் பேரிடரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் பலர் தொடர்புக்கு அப்பால் இருப்பதாகத் தகவல்கள் வரத் தொடங்கியதும் அதிர்ச்சி அலை பரவியது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக தலையிட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார்.

வெள்ளச் செய்திகளை அறிந்த உடனேயே முதல்வர் விஜய் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் மிகுந்த துயரத்தை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட தமிழக மக்களை விரைவில் மீட்கவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வாயிலாகத் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.இதையடுத்து தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையில் நடந்த இந்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தில் நேபாளப் பேரிடர் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை, அவர்களின் தற்போதைய நிலை, மீட்புப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதையும் படிங்க: ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.சிக்கியுள்ளவர்களும் அவர்களது குடும்பத்தினரும் உதவி பெறும் வகையில் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்தியாவிற்குள் இருந்து தொடர்புகொள்ள 1800 309 3793 என்ற கட்டணமில்லா எண்ணும் வெளிநாட்டிலிருந்து தொடர்புகொள்ள +91 80 6900 9900 மற்றும் +91 80 6900 9901 ஆகிய எண்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இல்ல கட்டுப்பாட்டு அறை எண்ணாக 9289516712 அறிவிக்கப்பட்டது. இந்த எண்கள் வாயிலாக ஏற்கனவே நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துள்ளன. அயலகத் தமிழர் நலத்துறை தொடர்ந்து தகவல்களைச் சேகரித்து மீட்புப் பணிகளுக்கு உதவி வருகிறது.சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் நேபாளம் சென்ற பல குழுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் தொடர்புக்கு அப்பால் இருப்பதாக ஆரம்பத் தகவல்கள் கூறின.

சிலர் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டாலும் பலரின் நிலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. குடும்பத்தினர் பதற்றத்துடன் காத்திருக்கும் நிலையில் அரசு தரப்பில் தொடர்ந்து நம்பிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.முதல்வர் விஜய் தலைமையிலான இந்த அவசர ஆலோசனையில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகளும் பேசப்பட்டன. மத்திய அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு, தூதரகத்துடன் தொடர் தொடர்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவை முன்னுரிமை அளிக்கப்பட்டன. பேரிடர் சூழலில் தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே முதன்மைக் கடமை என்பதை முதல்வர் வலியுறுத்தினார்.

 

 

 

இதையும் படிங்க: இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share