குவைத்தில் பரபரப்பு! 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! விமானிகள் 6 பேர் உயிர் தப்பினர்!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் குவைத் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுப் படைகளிடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் ஒரு பெரும் விபரீதம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரக போர் விமானங்கள், குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறிக்கும் பணியில் குவைத் வான் பாதுகாப்புப் படை ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்கப் போர் விமானங்களை எதிரி நாட்டு விமானங்கள் எனத் தவறுதலாகக் கருதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் சென்ட்காம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சுடப்பட்ட மூன்று விமானங்களில் இருந்தும் 6 விமானிகள் (ஒவ்வொரு விமானத்திலும் இருவர்) பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் குவைத் அதிகாரிகளால் மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 3-வது முறையாக விபத்தில் சிக்கிய தேஜஸ்..,! ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு பின்னடைவா?
இந்த விமானங்கள் ஈரானுக்கு எதிரான ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவைத் அரசு இந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்காவுடன் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குவைத் வான்பரப்பில் ஒரு போர் விமானம் தீப்பிடித்து சுழன்று கொண்டே கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் மற்றும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உயர்மட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடே இதற்குக் காரணம் எனக் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!