×
 

ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

ஆரக்கிள் நிறுவனம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆரக்கிள் (Oracle) நிறுவனம், தற்போது கடுமையான நிதி சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனால், உலகளவில் 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நிறுவனத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்பாக அமைய வாய்ப்புள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆரக்கிள், கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக, ஓபன் ஏஐ (OpenAI) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, AI-க்கான தரவு மையங்களை (Data Centers) விரிவாக்கும் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதற்காக பல பில்லியன் டாலர்கள் அளவில் மூலதன செலவு தேவைப்படுகிறது.

ஆரக்கிள் தனது கிளவுட் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 2026-ஆம் ஆண்டில் 45 முதல் 50 பில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால், AI தரவு மையங்களின் விரிவாக்கத்திற்கு தேவையான நிதியை வழங்குவதில் அமெரிக்க வங்கிகள் பல மறுப்பு தெரிவித்துள்ளன. கடன் வழங்குவதற்கான செலவுகள் உயர்ந்துள்ளதோடு, முதலீட்டாளர்களும் நிறுவனத்தின் கடன் அளவு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால், வெளி நிதி கிடைப்பது சிரமமாகியுள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 16,000 பேரா..!! பணி நீக்கம் நடவடிக்கையில் இறங்கிய அமேசான்..!! ஊழியர்கள் ஷாக்..!!

இந்த நிலையில், நிறுவனம் உள் செலவுகளை குறைத்து பணப்புழக்கத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 8 முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையை AI மற்றும் கிளவுட் திட்டங்களுக்கு மறுதலாக முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சில வணிக பிரிவுகளை விற்பனை செய்வது குறித்தும் ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, செர்னர் (Cerner) என்ற சுகாதார தொழில்நுட்ப பிரிவை விற்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கூடுதல் நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆரக்கிள் நிறுவனம் இதுவரை இந்த திட்டங்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், முதலீட்டு வங்கியான டி.டி. கோவன் (TD Cowen) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆட்குறைப்பு நடைமுறைக்கு வந்தால், நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பாதிக்கப்படும். இது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலை, எதிர்கால வளர்ச்சி குறித்த கவலையும் எழுந்துள்ளது. சமீப காலமாக, AI-ஐ காரணம் காட்டி பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மைக்ரோசாப்ட் சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்தது, அமேசான் 30,000 பேரை வெளியேற்றியது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆரக்கிளின் இந்த முடிவும் அதே போக்கின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், AI துறையில் ஆரக்கிளின் வளர்ச்சி தொடர்ந்து வலுவாக உள்ளது. இந்த சவால்களை சமாளித்து, நிறுவனம் தனது நீண்டகால இலக்குகளை அடைய முடியும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 16,000 பேரா..!! பணி நீக்கம் நடவடிக்கையில் இறங்கிய அமேசான்..!! ஊழியர்கள் ஷாக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share