அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்?!! பாகிஸ்தானில் 4 நாடுகளின் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!
மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றங்கள் குறித்து விவாதிக்க சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் வந்தடைந்தனர்.
மேற்காசியாவில் தொடர்ந்து நிலவும் பதற்றம் மற்றும் மோதல்களை தணிக்கும் நோக்கில், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கியின் வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளனர். இந்தப் பிரச்னையில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் முனைப்புடன் முயற்சி எடுத்து வருகிறது.
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களைத் தணிப்பதற்கான வழிகளை ஆராய இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு நேற்று இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் ஆகியோர் நேற்று முன்தினம் பாகிஸ்தான் வந்தடைந்தனர். சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று பாகிஸ்தான் சென்றார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், எகிப்து மற்றும் துருக்கி அமைச்சர்களுடன் தனித்தனியே இருதரப்பு பேச்சு நடத்தினார். சவுதி அமைச்சருடனும் தனியாக பேச்சு நடத்தவுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அமைச்சர்கள் அனைவரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: துவங்கியது ஜி-7 மாநாடு!! பிரான்ஸ் சென்றார் ஜெய்சங்கர்!! இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் நடக்குமா?!
மேற்காசியாவில் தற்போது நிலவும் பதற்றத்தை குறைக்கவும், நீண்டகால அமைதியை ஏற்படுத்தவும் இந்த உச்சி மாநாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் பிராந்திய நாடுகளுக்கு இடையேயான உரையாடலை வலுப்படுத்த முயற்சிக்கிறது. இந்த மாநாட்டில் மேற்காசியாவின் தற்போதைய நிலவரம், பதற்றத்தை தணிக்கும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆழமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாடு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை அனைத்து தரப்பினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எரிபொருள் நெருக்கடி! மோடி ஆலோசனை! சமாளிப்பது எப்படி? அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று மீட்டிங்!