பாக்., பிரதமர் மீண்டும் அமெரிக்கா பயணம்! ட்ரம்புடன் நெருக்கம்! ஷெபாஸ் ஷெரீப்பின் அடுத்தடுத்த அமெரிக்க பயணங்கள்!
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார். காசா பகுதியில் அமைதி மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச வாரியத்தின் தொடக்க கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த பயணம் நடைபெறுகிறது. பிப்ரவரி 18ஆம் தேதி அவர் அமெரிக்கா புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் பிப்ரவரி 19ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெறும்.
பாகிஸ்தானுடன் இணைந்து எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 முஸ்லிம் நாடுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. காசாவில் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவது, பகுதியின் மறுசீரமைப்பு பணிகள், எதிர்கால நிர்வாக கட்டமைப்பு ஆகியவை இந்த கூட்டத்தில் முக்கிய விவாத தலைப்புகளாக இருக்கும்.
கடந்த மாதம் டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தான் இந்த வாரியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இந்த வாரியத்தை டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதால், சில மனித உரிமை அமைப்புகள் இதை “நவ காலனித்துவம்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. காசா மீதான கட்டுப்பாடு வெளிநாடுகளின் கையில் செல்வதாக அவை குற்றம்சாட்டுகின்றன.
இதையும் படிங்க: எல்லை வரை வந்து சீண்டிய பாக்.,! காஷ்மீருக்கு குறி!! பாக்., பிரதமருக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!
இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்திற்காக அமெரிக்கா சென்ற ஷெபாஸ் ஷெரீப், அப்போது அதிபர் டிரம்புடன் வெள்ளை மாளிகையில் சந்தித்து வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இப்போது காசா விவகாரத்தில் மீண்டும் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை பேணும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது.
காசா பகுதியில் நீண்டகால போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன. ஆனால் வாரியத்தின் தலைமை அமெரிக்கா வசம் இருப்பதால், பேச்சுவார்த்தையில் எந்தளவு சுதந்திரம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பாகிஸ்தான் இந்த கூட்டத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணம் பாகிஸ்தான் – அமெரிக்கா உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. காசா அமைதி முயற்சிகளில் பாகிஸ்தானின் பங்கு இனி முக்கியத்துவம் பெறும்.
இதையும் படிங்க: அவமானமா இருக்கு!! எல்லார்கிட்டயும் கையேந்துறோம்! புலம்பி தவிக்கும் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!!