×
 

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்!! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாக்., பிரதமர்!!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் முக்கியப் பங்கு வகித்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக திறக்காவிட்டால் ஈரானின் நாகரீகத்தையே அழித்துவிடுவேன் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் தீவிர மத்தியஸ்தம் செய்தனர். இதன் விளைவாக, ஈரான் மீதான தாக்குதலை இரு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் நடத்திய உரையாடல்களின் அடிப்படையில், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால், இரு வாரங்களுக்கு தாக்குதலை நிறுத்தி வைக்க நான் தயார்” என்று தெரிவித்தார்.

மேலும், ஈரானிடம் இருந்து 10 அம்ச முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், இது நீண்டகால அமைதிக்கான அடித்தளமாக அமையும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான பல கருத்து வேறுபாடுகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், முழு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு வாரங்கள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 உயர்வு!! டீசல் ரூ.336-க்கு விற்பனை! மக்கள் தலையில் இடியை இறக்கிய பாக்.,!

இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “மிகுந்த பணிவுடன் அறிவிக்கிறேன். ஈரான் இஸ்லாமியக் குடியரசும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும், அவர்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லெபனான் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த விவேகமான நடவடிக்கையை மனதார வரவேற்கிறேன். இரு நாடுகளின் தலைமைகளுக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து உறுதியான உடன்படிக்கைக்கு வருவதற்காக, இரு நாட்டு தூதுக்குழுக்களையும் 2026 ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்துக்கு அழைப்பதாகவும் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார். “இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதியை அடைவதில் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். வரும் நாட்களில் இன்னும் பல நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.

கடந்த 40 நாட்களுக்கு மேல் நீடித்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினை, சுங்கக் கட்டணம் உள்ளிட்ட விவகாரங்கள் வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும். பாகிஸ்தானின் மத்தியஸ்தம் இந்தப் பிராந்திய அமைதிக்கு முக்கியப் பங்கு வகித்துள்ளது என உலக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இருப்பினும், இது இரு வார இடைக்கால ஒப்பந்தம் மட்டுமே என்பதால், முழு அமைதி ஏற்பட இன்னும் பல சவால்கள் உள்ளன. உலக நாடுகள் இப்போது இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன. 

இதையும் படிங்க: இதுதான் ரைட் டைம்!! ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்!! இந்தியர்களுக்கு தூதரகம் அட்வைஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share