×
 

சிந்து நதி நீர் ஒப்பந்தம்!! கனடாவிடம் உதவி கேட்கும் பாக்.,!! இந்தியா திட்டவட்டமான பதில்!

பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்திடம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீட்டெடுக்க ஆதரவளிக்குமாறு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க ஆதரவளிக்குமாறு கனடாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தின் பாகிஸ்தான் பயணத்தின் போது இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு அரசு பேசியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் சிந்து, ஜீலம், செனாப் உள்ளிட்ட ஆறு நதிகளின் நீர் பயன்பாடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக ஏற்பாடுகள் இருந்து வந்தன.

இந்த நிலையில், கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையும் படிங்க: இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

இந்த சந்திப்பின்போது, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு கனடா ஆதரவளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நீரை அரசியல் அல்லது ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை நட்பு நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், இந்த கோரிக்கைக்கு கனடா தரப்பில் இருந்து வெளிப்படையான ஆதரவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக நிறுத்தினால் மட்டுமே இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இந்திய வெளியுறவு அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை வழக்கமான உறவுகளை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்பட்டாலும், அது தற்போதைய விதிமுறைகளின் அடிப்படையில் இல்லாமல், மாற்றப்பட்ட புதிய சட்ட விதிகளின் கீழ் மட்டுமே இருக்கும் என இந்திய தரப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா–பாகிஸ்தான் இடையேயான நீர் பகிர்வு விவகாரம் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடாவின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்பட்டு வருகின்றன.

 

இதையும் படிங்க: சிந்து நதிநீரை தடுத்தால் கைகளை வெட்டுவோம்!! இந்தியாவுக்கு பாக்., அமைச்சர் பகீரங்க மிரட்டல்!! மீண்டும் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share