இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல், அணு ஆயுத அச்சுறுத்தல் காரணமாக ஈரான் மீது கடந்த 13ம் தேதி 'ஆப்பரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் தாக்குதலை துவங்கியது. இதில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள் ஆகியவை சேதமடைந்தன. ஈரான் ராணுவம் மற்றும் அதன் துணை பிரிவான புரட்சிப் படையைச் சேர்ந்த ஐந்து முக்கிய தளபதிகள் உயிரிழந்தனர். மேலும், அணு விஞ்ஞானிகள் பலரும் குறிவைத்து வீழ்த்தப்பட்டனர்.
இஸ்ரேல் ஏவுகணைகளை வீசுவதை தொடர்ந்தால், அதற்கான பதில் தாக்குதல் மிகவும் தீர்க்கமானதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியிருந்தார்.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறும்போது, இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை நிறுத்தினால், ஈரானும் தாக்குதலை நிறுத்தும் என கூறியுள்ளார். 3 நாட்களில் ஈரானின் 720 ராணுவ தளங்கள், 170 பிற இலக்குகளை தாக்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் இறந்தனர். இச்சூழலில், இஸ்ரேல் –ஈரான் இடையே விரைவில் அமைதி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!
ஈரானும், இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இந்தியா பாகிஸ்தான் இடையே நான் வர்த்தகத்தை பயன்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் ஒற்றுமையை கொண்டு வந்து, இரண்டு சிறந்த தலைவர்களை விரைவாக முடிவெடுக்க வைத்து சண்டையை நிறுத்தினேன் அதுபோல ஈரான்– இஸ்ரேல் தலைவர்களும் போரை நிறுத்துவார்கள்.
என் முதல் பதவிக்காலத்தின்போது, செர்பியா–கொசோவோ நாடுகள் தீவிரமாக சண்டையிட்டு கொண்டு இருந்தன. நீண்டகால போராக வெடிக்க இருந்ததை நான் நிறுத்தினேன். நைல் நதியில் அணைக்காக எகிப்து– அத்தியோப்பியா இடையே ஏற்பட்ட சண்டை எனது தலையீட்டால் தற்போது அமைதி நிலவுகிறது. அதுபோல இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே விரைவில் அமைதி ஏற்படும்.
பல பேச்சுவார்த்தை இப்போது நடக்கிறது. நான் நிறைய செய்கிறேன். எதற்கும் எனக்கு பெருமை கிடைப்பதில்லை. அது பரவாயில்லை. மக்கள் புரிந்து கொள்கிறார்கள். மத்திய கிழக்கை மீண்டும் சிறப்பாக்குவோம் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா –பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடும் இல்லை; பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தியதாக இந்தியா பலமுறை தெளிவுபடுத்தி உள்ளது. இருப்பினும், மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் உரிமை கோரி வருகிறார்.
இதையும் படிங்க: கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?