108 ஆம்புலன்ஸ்களை 2,500 ஆக உயர்த்துக! புதிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
2005ல் மத்திய அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்ததில் பெருமிதம் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அவசரகால மருத்துவச் சேவையை மேம்படுத்தும் வகையில், தற்போது இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 2,500 ஆக உடனடியாக உயர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் புதிய அரசுக்கு அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2005-ஆம் ஆண்டு தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், தொலைநோக்கு பார்வையுடன் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதை மிகுந்த நெகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் நினைவு கூர்ந்துள்ளார்.
இத்திட்டம் இன்று கோடிக்கணக்கான மக்களின் உயிர் காக்கும் அரணாக விளங்குவதாகவும், குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்குச் சராசரியாக 3 லட்சம் தாய்மார்களின் பிரசவ கால உயிரைக் காக்கும் உன்னதத் திட்டமாக இது திகழ்வது தமக்கு அளவில்லாப் பெருமையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாமகவின் முக்கிய நிர்வாகக் குழு கூட்டம் - மே 19-ல் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை!
தொடர்ந்து தமிழகத்தின் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது அடிப்படை வசதிகள் கொண்ட 977 வாகனங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக வெறும் 1,353 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் அவசரச் சிகிச்சைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த எண்ணிக்கையானது முற்றிலும் போதுமானதாக இல்லை என்று சாடிய அவர், ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைகள் தங்கு தடையின்றிச் சென்றடைய ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 2,500 ஆகப் புதிய அரசு போர்க்கால அடிப்படையில் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், சுகாதாரத் துறையில் பெரும் சீர்திருத்தத்தைக் கோரும் பாமக தலைவரின் இந்த அறிக்கை அரசியல் மற்றும் மருத்துவ வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!