ருமேனியாவில் ஒலித்த இந்தியாவின் பெருமை! ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கவுரவம்! சிறப்புகள் என்ன?!
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ருமேனியா புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ருமேனியாவின் புகழ்பெற்ற புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான அவரது அரசுமுறை பயணத்தின் போது வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம், இந்தியா–ருமேனியா உறவின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ருமேனியா சென்ற அவர், அந்நாட்டு அதிபர் நிகோசர் டென்னுடன் சந்தித்து இருநாடுகளின் நட்புறவு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் கவுரவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!
கவுரவ முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த அங்கீகாரத்தை தனிப்பட்ட பெருமையாக அல்லாமல் 140 கோடி இந்திய மக்களின் சார்பில் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் ருமேனியா மக்களுக்கிடையேயான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பாக இந்த விருது அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கல்வியே ஒரு மனிதரின் வாழ்க்கையையும், ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் மாற்றும் மிகப்பெரிய சக்தி என்று வலியுறுத்திய அவர், உலக நாடுகளுக்கிடையே அறிவுப் பரிமாற்றமும் கல்வி ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெற வேண்டும் என்றார். இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் கல்வி அமைப்புகளே எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ருமேனிய பயணத்தின் போது நடைபெற்ற இந்தியா–ருமேனியா தொழிலதிபர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அவர், வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் உலக நிறுவனங்களுக்கு ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துரைத்தார். உற்பத்தி, தொழில்நுட்பம், புதுமை மற்றும் வர்த்தகத் துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டால் பரஸ்பர வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் இந்த ஐரோப்பிய பயணம், இந்தியாவின் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியா செல்லும் இந்திய ஜனாதிபதி! வரலாறு படைக்கும் திரவுபதி முர்மு!