×
 

நேபாளத்தில் தொடரும் வன்முறை.. இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!!

நேபாளத்தில் தொடரும் வன்முறையால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம்.

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அரசாங்க ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இளைஞர்கள் தொடங்கிய போராட்டங்கள் வன்முறையாக வெடித்து, இதுவரை 22 பேர் உயிரிழந்து, 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8) காத்மாண்டு உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக ‘ஜெனரேஷன் Z’ என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு அரசு விதித்த தடையை எதிர்த்து திரண்டனர். 

இந்த தடை, இந்த தளங்கள் அரசிடம் பதிவு செய்யத் தவறியதாகக் கூறி விதிக்கப்பட்டது. போராட்டங்கள் காத்மாண்டுவின் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டபோது, காவல்துறை கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைப் பயன்படுத்தியதால், நிலைமை மோசமடைந்தது. இதில் 22 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: உச்சகட்ட பதற்றம்! நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா...

இந்த வன்முறையை அடுத்து, காத்மாண்டு, போகாரா, இடஹாரி உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தீவைப்பு மற்றும் அரசியல் தலைவர்களின் இல்லங்களை இலக்கு வைத்த தாக்குதல்களும் பதிவாகியுள்ளன. இந்தக் கலவரங்களைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று பதவி விலகினார். சமூக ஊடகத் தடையும் தற்காலிகமாக நீக்கப்பட்டது. 

இருப்பினும், இளைஞர்களின் கோபம் தணியவில்லை; அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் தூதரகங்கள் இந்த வன்முறைக்கு கவலை தெரிவித்து, விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும் வன்முறையைக் கண்டித்து, வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தியுள்ளது. இந்த நெருக்கடி, நேபாளத்தில் சமூக ஊடக சுதந்திரம் மற்றும் அரசாங்க வெளிப்படைத்தன்மை குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் தொடரும் இந்த வன்முறையால் இந்தியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகம் நேபாளத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்தியர்கள் +977-9808602881, +977-9810326134 ஆகிய எண்களில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். 


 

இதையும் படிங்க: நாட்டையே கொளுத்திய GEN-Z தலைமுறை... பற்றி எரியும் நேபாள நாடாளுமன்றம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share