"பிரதமர் மௌனம் காப்பது ஏன்?": ஓமன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மோடியை விமர்சித்தார் ராகுல் காந்தி!
அமெரிக்கத் தாக்குதலில் 3 இந்தியர்கள் பலியான நிலையில், பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓமன் நாட்டு கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலியான விவகாரத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனம் காப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தற்பொழுது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சர்வதேச கடல் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்திய மாலுமிகள் இருந்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 'எம்.டி செட்டபெல்லோ' (MT Settebello) என்ற கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆதித்யா சர்மா, சுரேஷ் பட்நாலா, சிவானந்த் சௌராசியா ஆகிய 3 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய அரசை நோக்கிப் பல்வேறு அடுக்கடுக்கான தார்மீகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிரதமரின் மௌனம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரமாவது: "சர்வதேசப் பகுதியில் மூன்று நாட்களில் மூன்று கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், நமது சமரசம் செய்துகொண்ட நிலையில் உள்ள (Compromised PM) பிரதமர் இதுவரை இதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியும் ஓர் இந்தியரைக் கொல்லும்போது, நாட்டின் பிரதமராக இருப்பவர் அதற்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் எழுப்ப வேண்டும். ஆனால், சர்வதேச சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டுள்ள இவரோ, ஒரு வார்த்தை கூடப் பேசத் துணியமாட்டார்" என்று மிக உறைப்பாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!
மேலும், "அடுத்த வாரம் பிரான்சில் நடைபெற உள்ள ஜி7 (G7) மாநாட்டில் பங்கேற்கும் மோடி அவர்கள், நமது மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே அங்குச் சென்று புன்னகைப்பார், கட்டிப்பிடிப்பார், பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார். ஆனால், உயிரிழந்த அந்த 3 இந்தியர்களுக்காகப் பேசுவதற்கு அவரிடம் ஒரு வார்த்தை கூட இருக்காது. இத்தகைய சமரசப் போக்கைக் கொண்டுள்ள ஒரு பிரதமரால் இந்தியத் தாயின் மைந்தர்களை ஒருபோதும் பாதுகாக்க முடியாது. ஏனெனில், நமது மகன்களின் உயிரைப் பறித்தவர்களை நேருக்கு நேராக எதிர்கொள்வதற்கான தார்மீக பலமோ அல்லது துணிச்சலோ அவரிடம் இல்லை" என்றும் ராகுல் காந்தி தனது பதிவில் மிக ஆக்ரோஷமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரை நேரில் வரவழைத்துத் தனது கடுமையான கண்டனப் பதிவை (Demarche) வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், அடுத்த வாரம் ஜி7 மாநாடு நடைபெற உள்ள சூழலில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையால் இந்தியர்கள் பலியான விவகாரத்தை முன்வைத்து, பிரதமரின் மௌனத்திற்கு எதிராக ராகுல் காந்தி விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை தேசிய அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !