சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தள்ளுமுள்ளு! கோபத்தில் ராகுல்காந்தி எடுத்த அதிரடி முடிவு!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் உரிய வரவேற்பும் பாதுகாப்பும் அளிக்கப்படாததோடு, கட்சியினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் ராகுல் காந்தி கோவமடைந்தார்.
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்ட பரபரப்பால் கடும் அதிருப்தியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் இல்லாததுடன், கட்சியினரின் தள்ளுமுள்ளு சம்பவத்தால் கோபமடைந்த ராகுல், திட்டமிடப்பட்ட ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்து ஹோட்டலுக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவிற்கு பிறகு, விஜய் மற்றும் ராகுல் இருவரும் சத்தியமூர்த்தி பவனுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் ராகுல் மட்டும் அங்கு வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் மற்றும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் வந்திருந்தனர்.
ராகுல் காரிலிருந்து இறங்கியதும், அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் அவரை சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கேரள முதல்வராகிறார் கே.சி.வேணுகோபால்! பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறாரா தவெக விஜய்?!
சிலர் சால்வை அணிவிக்க முயன்ற நிலையில், மற்றொரு தரப்பினர் நெருங்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றாலும், ராகுல் கடும் எரிச்சலடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் சத்தியமூர்த்தி பவனுக்குள் சென்ற ராகுல், காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநில தலைவரின் அறையில் சில நிமிடங்கள் மட்டுமே தங்கியிருந்தார். அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த தேநீர் மற்றும் சிற்றுண்டிகளையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் திட்டமிடப்பட்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல், நேரடியாக நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார்.
அங்கு தங்கியிருந்தபோது, தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் புதிய அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மேலிட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சத்தியமூர்த்தி பவனில் நடந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தற்போது தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ராகுலுக்கு இந்த முறை உரிய வரவேற்பு கிடைக்கவில்லை” என்ற குற்றச்சாட்டும் கட்சிக்குள் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!