Whatsapp-ஐ Uninstall பண்ணுங்க.. ஈரான் மக்களுக்கு அரசு திடீர் ஆர்டர்.. காரணம் இதுதான்!
செல்போனிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கச் சொல்லி ஈரான் அரசு தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று இஸ்ரேலும், அதன் கூட்டாளியான அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. உடனே ஈரானின் அணு ஆய்வு கூடங்களை குறி வைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை துவங்கியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலை தாக்கியதால் மிகப்பெரிய போர் வெடித்தது. இரு நாடுகளும் மாறி மாறி தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன.
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் 28 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரம் ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அணு கட்டமைப்புகள், ராணுவ தளங்களில் ஈரான் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அதோடு முக்கியமான அணு விஞ்ஞானிகள், பிராதன படை தளபதிகளையும் ஈரான் இழந்தது.
ஈரான் நாட்டின் 7 முக்கிய ராணுவ தளபதிகள், 9 அணு விஞ்ஞானிகளை ஒரே நாளில் இஸ்ரேல் தீர்த்து கட்டியது. தலைமை தளபதிகள் ஹுசைன் சலாமி, முகம்மது பகேரி, கோலம் அலி ரஷீத், தளபதிகள் ஆமிர் அலி ஹஜிசாதே, அலி ஷம்கானி, கோலம்ரசா மெஹ்ரபி, மெஹ்தி ரப்பானி ஆகிய 7 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். மேஜர் ஜெனரல் கோலம் அலி ரஷீத் ஈரான் ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்தார்.
இதையும் படிங்க: சமரசமா? அதுக்கு இனி வாய்ப்பேயில்லை! போர் துவங்குவதாக ஈரான் தலைவர் காமெனி அறிவிப்பு..!
ராணுவ தலைமையகத்தில் போர்க்கால படைத்தளபதி பொறுப்பையும் கோலம் அலி ரஷித் வகித்தார். இஸ்ரேல் தாக்குதலில் கோலம் அலி ரஷித் கொல்லப்பட்டதை தொடர்ந்து அலி சட்மானியை போர்க்கால தளபதியாக நியமித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவிப்பு வெளியிட்டார். ராணுவ தலைமையகத்தில் போர்க்கால படை தளபதி பொறுப்பையும் அளித்தார். 13ம் தேதி அலி சட்மானியை போர்க்கால தளபதியாக அலி கமேனி நியமித்தார். ஆனால், 4வது நாளில் அவரது கதையையும் இஸ்ரேல் ராணுவம் முடித்தது.
இந்தத் தாக்குதல்களின் துல்லியம் ஈரானிய அரசாங்கத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது. இதனையடுத்து, வாட்ஸ்அப் உட்பட சில செயலிகள் மற்றும் தொலைபேசிகளால் இருப்பிடத் தரவுகள் கசிந்ததன் அடிப்படையில் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனவே, வாட்ஸ்அப்பை தங்கள் தொலைபேசிகளிலிருந்து அகற்றுமாறு தனது குடிமக்களுக்கு ஈரான் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஈரானில் டிஜிட்டல் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் அச்சங்களை அதிகரித்துள்ளது.
குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த வாட்ஸ்அப் நிறுவனமான மெட்டா, “இந்த தவறான அறிக்கைகள் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் எங்கள் சேவைகள் தடுக்கப்படுவதற்கு ஒரு சாக்காக இருக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.
உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் கண்காணிக்கவில்லை. யாருக்கு யார் செய்தி அனுப்புகிறார்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்கவில்லை. மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் கண்காணிக்கவில்லை. நாங்கள் எந்த அரசாங்கத்திற்கும் மொத்தத் தகவல்களையும் வழங்குவதில்லை.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போரில் களமிறங்கும் அமெரிக்கா.. ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டலால் பதறும் உலகம்..!