4வது ஆண்டில் உக்ரைன் - ரஷ்யா போர்! முரண்டு பிடிக்கும் தலைவர்கள்! பலனளிக்குமா 3ம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை!
ரஷ்யா - உக்ரைன் இடையேயான அமைதி பேச்சு, சுவிட்சர்லாந்தில் நேற்று துவங்கிய நிலையில், நிலப்பரப்பு தொடர்பான விவகாரமே மிக முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவை உலுக்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது அமைதி திட்டத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன.
ஏற்கனவே அபுதாபியில் இரண்டு சுற்று முத்தரப்பு பேச்சுகள் (ரஷ்யா-அமெரிக்கா-உக்ரைன்) நடந்தன. இதன் தொடர்ச்சியாக, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று மூன்றாம் சுற்று அமைதி பேச்சு தொடங்கியது. இந்த சுற்றில் நிலப்பரப்பு தொடர்பான விவகாரங்களே மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
ரஷ்யா தற்போது உக்ரைனின் சுமார் 20 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இதில் 2014ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியா, டொன்பாஸ் பகுதிகள் மற்றும் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் பெரும்பகுதி அடங்கும். ரஷ்யா, உக்ரைன் மீதமுள்ள கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கோரி அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: ஊட்டியில் மல்டி கார் பார்க்கிங்.. அதுவும் விரைவில்..!! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பிராமிஸ்..!!
ஆனால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இதற்கு திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “2014இல் கிரீமியாவை இழந்தது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டோம். நிலப்பரப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தனது முழு இறையாண்மையுடன் கூடிய எல்லைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும், இரு நாடுகளும் ஒருவர்மீது ஒருவர் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனால் பதற்றம் குறையவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தப் பேச்சை “பெரிய பேச்சு” என்று குறிப்பிட்டுள்ளார். வரும் ஜூன் மாதத்துக்குள் இறுதி முடிவெடுத்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கடுமையான காலக்கெடு விதித்துள்ளார்.
இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் நிலையில், ஜெனிவா பேச்சு எந்த திசையில் செல்லும் என்பது உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால் ஐரோப்பிய பாதுகாப்பு சூழல் மாறுமா? அல்லது போர் மேலும் தீவிரமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரம்பின் அழுத்தம் இந்தப் பேச்சுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என உலகம் உற்று நோக்கி வருகிறது.
இதையும் படிங்க: கொளுத்தி எடுக்கும் வெயில்!! ஆரஞ்ச் அலர்ட்!! கேரளாவில் வேலை நேரம் மாற்றம்!!