விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!
அரசுப் பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் மாணவியை அவமானப்படுத்திய 'ரீல்ஸ் அமைச்சர்' கீர்த்தனாவின் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில், பள்ளி மாணவிகளிடம் தார்மீகக் கட்டுப்பாடின்றி நடந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயலுக்கு, உங்களது விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்; ரீல்ஸ் மோகத்திற்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப் பள்ளி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளியின் சமையலறை, கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர், தொடர்ந்து வகுப்பறைக்குள் சென்று மாணவிகளுடன் உரையாடினார். அப்போது அங்கிருந்த ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டபோது, அந்தப் பிஞ்சு குழந்தை பயம் மற்றும் தயக்கம் காரணமாகப் பதிலளிக்கத் திணறியுள்ளது. மேலும், அவரது தந்தையின் தொழில் குறித்து அமைச்சர் ஆங்கிலத்தில் கேட்டபோது, அதனை அந்த மாணவி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொதுவெளியில் கேமராக்கள் முன்னிலையில் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, வகுப்பில் லாஸ்ட் பெஞ்ச் மாணவர்கள் குறித்தும், கணினி அறையில் பயன்படுத்தப்படாத கணினிகள் மீது படிந்திருந்த தூசு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் அமைச்சரின் குழுவினர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வடிவில் வெளியிட்டனர். இந்த வீடியோ டிஜிட்டல் தளங்களில் மிக வேகமாகப் பரவி பெரும் விவாதக் கிளப்பியது. ஒரு தரப்பினர் அரசுப் பள்ளிகளில் கற்றல் தரம் குறைவாக இருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியதாக ஆதரித்த நிலையில், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு சிறுமியைப் பொதுவெளியில் கேமராக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி, அவளுக்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் செயலாக இது அமைந்துவிட்டது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புப் புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!
இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கீர்த்தனாவின் இந்தச் செயலை மிகக் காட்டமாகச் சாடினார். அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ரீல்ஸ் அமைச்சர் ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. இது முற்றிலும் உணர்வற்ற செயல். மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தெந்த சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அந்த அமைச்சருக்குத்தான் முதலில் அதிகாரிகள் கிளாஸ் எடுக்க வேண்டும். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ஆவேசமாக முழங்கினார். அமைச்சரின் இந்த சுயவிளம்பர உத்தியும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அளித்துள்ள இந்த பதிலடியும் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மாபெரும் விவாத அலைகளைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!