மலேசிய உறவை இணைக்கும் பாலமாக தமிழ் மொழி திகழ்கிறது - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
மலேசியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளையும் இணைக்கும் மிகச்சிறந்த பாலமாகத் தமிழ் மொழி திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் ஒரு மிக முக்கியமான ‘உயிருள்ளப் பாலமாக’ தமிழ் மொழி விளங்குவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
தமிழ் மொழி இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது இந்தியாவால் உலகிற்கு அளிக்கப்பட்ட மாபெரும் கொடை என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். தமிழ் இலக்கியங்கள் இறவாத் தன்மை கொண்டவை என்றும், தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் கல்வி நிலையங்கள், ஊடகங்கள் மற்றும் கலாச்சார வாழ்வியலில் தமிழ் மொழி ஒரு வலுவான சக்தியாகத் திகழ்கிறது. மலாயா பல்கலைக்கழகத்தில் 'திருவள்ளுவர் இருக்கை' அமைந்துள்ளதைப் பெருமையுடன் குறிப்பிட்ட அவர், தமிழ் மரபை மேலும் வலுப்படுத்த விரைவில் மலேசியாவில் ஒரு ‘திருவள்ளுவர் மையம்’ அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படிங்க: “மார்ச் 1-ல் மதுரையில் பிரதமர் மோடி மாநாடு!” சேலத்தில் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் ஒரு சிறந்தப் பாடகர் என்பதைச் சுட்டிக்காட்டிய மோடி, அவருக்குப் பழைய இந்திப் பாடல்கள் மட்டுமின்றி, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் தமிழ் பாடல்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு இருப்பதாகக் கூறி நெகிழ்ந்தார்.
இந்தத் தைப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே ‘ஒலி-ஒளி கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம்’ (Audio-Visual Co-production Agreement) கையெழுத்தானது. இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது,
“இன்று கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் மூலம், இரு நாட்டுத் திரைப்படத் துறையினரும் இணைந்துப் பணியாற்ற வழிவகை ஏற்படும். குறிப்பாகத் தமிழ் திரைப்படங்கள் மற்றும் இசை இரு நாட்டு மக்களின் இதயங்களை மேலும் நெருக்கமாக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்”.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், திரைப்படத் தயாரிப்பு, இசை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்துச் செயல்படும். இதன் மூலம் தமிழ் சினிமா மலேசியாவில் புதியப் பரிமாணத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!