பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!
பாகிஸ்தானில் உள்ள மசூதியில் இன்று நடத்தப்பட்டக் கொடூரத் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் இன்று மதியம் நடத்தப்பட்டக் கொடூரத் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்தின் தென்கிழக்குப் பகுதியான ஷெஷாத் டவுன், தர்லாய் கலாம் (Tarlai Kalan) பகுதியில் உள்ள கதிஜா துல் குப்ரா (Khadija Tul Kubra) இமாம்பர்கா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் நுழைய முயன்றத் தற்கொலைப்படை தீவிரவாதியை நுழைவு வாயிலில் இருந்தப் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்கிடையில் நடந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அந்தத் தீவிரவாதி மசூதியின் முக்கியப் பகுதிக்குள் ஓடிச் சென்றுத் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
பயங்கரச் சத்தத்துடன் வெடித்த இந்த குண்டுவெடிப்பில் மூன்று மாடி கொண்ட அந்த மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 169-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியைச் சீல் வைத்ததுடன், காயமடைந்தவர்களை இஸ்லாமாபாத் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவுடன் விளையாட மாட்டோம்! பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு!
மருத்துவமனையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தடை செய்யப்பட்ட ‘பித்னா-உல்-க்வாரிஜ்’ (தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் - TTP) அல்லது ஐ.எஸ். (IS-K) தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் இந்த மனிதாபிமானமற்றத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டத் தாக்குதலுக்குப் பிறகு, தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இரண்டாவது மிகப்பெரியத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது! இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!