மது அருந்திவிட்டு பணம் கொடுக்காத பெண்ணுக்கு மொட்டை அடித்த பார் நிர்வாகம்! பாங்காக்கில் அதிர்ச்சி!
செலுத்தப்படாத பில் தொகையின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் வகையில் தனது தலைமுடியை மொட்டையடிக்க அந்த இளம்பெண் சம்மதித்ததாக பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மதுபான விடுதியில் ஏற்பட்ட பணம் செலுத்தாத விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் பில் தொகையை செலுத்தாத நிலையில், அவருக்கு மொட்டை அடித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 25-ந்தேதி 18 வயது இளம்பெண் ஒருவர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பாங்காக்கின் பிங்க்லாவ் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு உணவு மற்றும் மதுபானங்களை எடுத்துக்கொண்ட அவர், சுமார் 60,000 தாய் பாட் மதிப்பிலான பில் தொகையை செலுத்த வேண்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இந்த தொகை பல லட்சம் ரூபாய் ஆகும்.
இளம்பெண் பில் தொகையை செலுத்தாமல் வெளியேற முயன்றதை ஊழியர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதற்கு பதிலாக, பாரின் ஊழியர்களே இந்த விவகாரத்தை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாளத்தை விழுங்கிய வெள்ளம் எப்படி உருவானது? சீனாவின் ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!
அப்போது, செலுத்தப்படாத பில் தொகையின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் வகையில் தனது தலைமுடியை மொட்டையடிக்க அந்த இளம்பெண் சம்மதித்ததாக பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின்சார ரேசர் மூலம் அவரது தலைமுடி மொட்டையடிக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் ஒருவர் வீடியோ பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும் சம்பவம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, பணம் செலுத்தாத விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல், ஒருவரை இவ்வாறு தண்டித்தது ஏற்கத்தக்கதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் பலரும், குற்றச்சாட்டு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்குவது சரியல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இளம்பெண் உண்மையில் தலைமுடியை மொட்டையடிக்க முழுமையாக சம்மதித்தாரா அல்லது சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பதும் விசாரணையில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை, சம்பவத்தின் முழு பின்னணி குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாது.
இதையும் படிங்க: அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!