"நீ கருப்பா இருக்க.. சாதி பெயர் சொல்லி தீக்குள்ள போட்டுட்டாங்க..! கதறிய தாய்..!
நிறத்தை குறிப்பிட்டும் சாதி பெயரை சொல்லி திட்டியும் தன் மகனை தீயில் வீசியதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் குற்றம் சாட்டினார்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு இன்றும் பரவலாக இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாடு போன்ற முற்போக்கு என்று பேசப்படும் இடங்களில்கூட, குழந்தைகள் தங்கள் சாதியை மறைக்க முடியாமல், தினசரி அவமானங்களை எதிர்கொள்கின்றனர். இது வெறும் பெரியவர்களின் பிரச்சினை அல்ல. பள்ளி வளாகத்தில் தொடங்கி, குழந்தைகளின் மனதில் ஆழமாக வேரூன்றிவிடுகிறது.
பள்ளிக்கு வரும் சிறு வயது மாணவர்களே இதை உணரத் தொடங்கிவிடுகின்றனர். வகுப்பறையில் இருக்கை ஏற்பாடு செய்யும்போது கூட பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். மேலும் இதில் கொடுமை என்னவென்றால், சில சமயங்களில் இந்த பாகுபாடு வன்முறையாக மாறுவது. நாங்குநேரி போன்ற சம்பவங்கள் அதற்கு உதாரணம். சாதி பெயரால் தகராறு, அடி உதை, கூட காயம்பட்டு உயிரிழப்பு வரை நீள்வது வருத்தமான உண்மை. இதனால் பல மாணவர்கள் பள்ளியை விட்டு நடுவிலேயே நிறுத்திவிடுகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூரில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் சாதிய கொடுமையால் 8ம் வகுப்பு மாணவரை சக மாணவர்கள் தீயில் தூக்கிவீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: சாதிய கொடுமை..! 8ஆம் வகுப்பு மாணவன் தீயில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்..!
தன்மகனை இரண்டு சக மாணவர்கள் சேர்ந்து கை ஒருவரும் கால் ஒருவரும் பிடித்துக்கொண்டு தீயில் வீசியதாகவும் கையெல்லாம் வெந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் வேதனையுடன் தெரிவித்தார். நீ கருப்பாக இருக்கிறாய் என்றும் ஊதுபத்தி கலரில் இருக்கிறாய் எனவும் கிண்டல் அடித்ததுடன் சாதி பெயரை சொல்லியும் தன் மகனை திட்டி இருப்பதாக கூறினார். பிறகு தன் மகனை தீயில் தூக்கி வீசி எறிந்ததாகவும் மாணவனின் தாய் கதறினார். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் சுநேத்ரா!! எளிய முறையில் நடக்கும் பதவியேற்பு விழா!