“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா. கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 9 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா, ஆவணித்திருவிழா, கந்தசஷ்டி உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டுக்கான ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
காலை 5.15 மணிக்குத் திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், மாப்பொடி திரவியங்கள் உள்பட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!
இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
திருவிழா நாட்களி செப்டம்பர் 4 (ஐந்தாம் திருவிழா) இரவு 7:30 மணிக்கு மேலக் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமியும் அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறும்.
செப்டம்பர் 5 ம் தேதி காலை கோ ரதமும், இரவு வெள்ளி ரதமும் வீதி உலா வருதல் நடைபெறும். செப்டம்பர் 6 (ஏழாம் திருவிழா- சிவப்பு சாத்தி ஊர்வலமும், அதிகாலை 5 மணிக்குச் சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவையும், காலை 9 மணிக்குச் சுவாமி சண்முகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்தடைதல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.
செப்டம்பர் 7 ம் தேதி எட்டாம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோயில் சேருதல் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணிக்கு சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
செப்டம்பர் 9 ம் தேதி பத்தாம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு விழாவின் சிகர நிகழ்வான புகழ்பெற்ற தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!