ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
நாளை மறுநாள் வாக்குப்பதிவு; வெளிமாவட்ட நபர்கள் வெளியேறத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்த அரசியல் கட்சிகளின் வாக்குச் சேகரிப்பு முழக்கங்கள் ஓய்ந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை 6 மணி முதல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக வாக்குச் சேகரிப்பதும் தேர்தல் விதிகளின்படி குற்றமாகும். இதனை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர்கள் அல்லாத, வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கியுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உடனடியாக அந்தந்தத் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் வேட்டை: தூக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டு கட்டுகள்... அமமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்...!
வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று மாலை முதல் வரும் 23-ஆம் தேதி நள்ளிரவு வரை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.
மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் எனப் பல தலைவர்கள் மேற்கொண்ட சூறாவளிப் பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. இனி மக்களின் தீர்ப்பு என்ன என்பது வரும் 23-ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாக உள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு 1996 நிலைதான் ஏற்படும்! தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி கணிப்பு!