×
 

டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைது அச்சுறுத்தல்களைத் தடுக்க 24 மணி நேரமும் இயங்கும் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் அமைத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் சமீபகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) போன்ற நவீன சைபர் குற்றங்களைத் தடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ‘தமிழ்நாடு மாநில சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ (TNS4C) அமைத்துத் தமிழக அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகப் போலியான பங்குச் சந்தை முதலீட்டு ஆசைகள், பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் சிபிஐ (CBI), சுங்கத்துறை (Customs), காவல்துறை அதிகாரிகள் போலப் பேசி வீடியோ அழைப்பு மூலம் பொதுமக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் 'டிஜிட்டல் கைது' மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய மோசடி வலைப்பின்னல்களைக் கூண்டோடு ஒழிக்கவும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாகத் துரித நிவாரணம் வழங்கவும் இந்த புதிய ஒருங்கிணைப்பு மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களே... ஹாப்பி நியூஸ்.!! ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு..!

 

இந்த மையம் முழு நேரமும், அதாவது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும் அதிநவீன உள்கட்டமைப்புடன் செயல்படும். பொதுமக்கள் சைபர் குற்றப் புகார்களை உடனடியாகப் பதிவு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து மோசடிப் பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்படுவதைத் துரிதமாகத் தடுத்து நிறுத்தி முடக்கவும் (Freezing) இந்த மையம் தீவிரமாகக் களமிறங்கும். வங்கி அதிகாரிகள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவுகளுடன் இந்த மையம் நேரடியாக ஒருங்கிணைந்து உடனுக்குடன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் இம்மையத்தைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும், புதிய தொழில் நுட்பக் கருவிகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு குற்றவாளிகள் உடனடியாகக் கூண்டில் அடைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share