ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் சந்தேகம்!! குட்டையை குழப்பும் ட்ரம்ப்!! குழம்பி நிற்கும் இஸ்ரேல்!
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சூழல் உருவாகி வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக நிலவும் அணுசக்தி பதற்றம் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த பின்னர், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
வாஷிங்டனில் இருந்து இஸ்ரேல் திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, “அமெரிக்காவின் வலிமையை உணர்ந்த ஈரான் இப்போது பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. ஈரானுடன் சிறப்பான அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளும் சூழல் உருவாகி வருகிறது என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்” என்றார்.
கடந்த கால ஒப்பந்தம் தவறு என்று ஈரான் உணர்ந்துள்ளதாகவும், இப்போது நல்லொப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் கருதுவதாகவும் நெதன்யாகு கூறினார். ஆனால், “இந்த ஒப்பந்தத்தின் உறுதிப்பாடு குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் கைகோர்ப்பு! டிரம்ப்-நெதன்யாகு சீக்ரெட் பிளான்!
நெதன்யாகு மேலும் வலியுறுத்தியதாவது: “ஒப்பந்தம் வெறும் அணுசக்தி விவகாரத்தில் மட்டும் நின்றுவிடக் கூடாது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம், ஹமாஸ், ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவு ஆகியவையும் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும். இல்லையெனில் அது பயனற்றதாக இருக்கும்.”
கடந்த ஆண்டு இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கியதும், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக போர் கப்பல்கள், ஏவுகணைகளை அனுப்பியதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஈரானும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இஸ்ரேல் தரப்பில், ஈரானின் அணு ஆயுத திட்டம், பயங்கரவாத ஆதரவு ஆகியவை ஒப்பந்தத்தில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாலும், நெதன்யாகுவின் சந்தேகம் இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல், ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு ஆதரவு, பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் ஆகியவை அடுத்தடுத்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா அல்லது மீண்டும் தோல்வியடையுமா என்பது மேற்காசிய அரசியலில் முக்கிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவை அலறவிடும் ஈரான்!! போர் கன்ஃபார்ம்!! ட்ரம்புக்கு ஆட்டம் காட்டும் கமெனி அரசு!