×
 

இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை பங்கேற்க உள்ள நிலையில், இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.

நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையேயான கருத்து மோதல் மீண்டும் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாநாட்டில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க உள்ள சூழலில், டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய சமூக வலைதள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த மாதம் பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டுக்குப் பிறகு, மெலோனி தன்னுடன் செல்பி எடுக்க பலமுறை கேட்டதாக டிரம்ப் பொதுவெளியில் கூறியிருந்தார். அந்தக் கருத்து அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக பதிலளித்த மெலோனி, அந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தார். தானோ அல்லது இத்தாலியோ யாரிடமும் கெஞ்சும் நிலைக்கு செல்லாது என்றும், இது உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதை என்றும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரம் இரு நாடுகளின் தூதரக உறவுகளிலும் சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக, இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் தனது திட்டமிடப்பட்ட அமெரிக்க பயணத்தை ரத்து செய்ததும் சர்வதேச கவனத்தை பெற்றது.

இதையும் படிங்க: இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்!! நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தகவல்! வெளியானது குட்நியூஸ்!

இந்த நிலையில், துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் டிரம்ப் மற்றும் மெலோனி இருவரும் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் ஓரத்தில் இரு தலைவர்களும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், டிரம்ப் தனது Truth Social சமூக வலைதளத்தில் மெலோனி தன்னை நோக்கிப் பார்ப்பது போன்ற பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன், "Restraining Order Needed" (தடை உத்தரவு தேவை) என்று கிண்டலாக குறிப்பிட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் இதை நகைச்சுவையாக பகிர்ந்து வரும் நிலையில், விமர்சகர்கள் இது நட்பு நாடுகளின் தலைவர்களை தேவையற்ற முறையில் குறிவைக்கும் அரசியல் கருத்து என குற்றம்சாட்டி வருகின்றனர்.

நேட்டோ உச்சி மாநாட்டில் பாதுகாப்பு, உக்ரைன் போர், ஐரோப்பிய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ள நிலையில், டிரம்ப் மற்றும் மெலோனி இடையேயான இந்த வார்த்தைப் போர் மாநாட்டிலும் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share