×
 

ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதி! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பிரதேசம் என அறிவித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஈரானின் ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் புதிய பிரதேசம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை வட்டமிட்ட வளைகுடா வரைபடத்தை தனது அதிகாரப்பூர்வ ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அதற்கு புதிய அமெரிக்கப் பிரதேசம் எனப் பெயரிட்டுப் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.  

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், உலக நாடுகளுக்கான முக்கியக் கப்பல் போக்குவரத்துத் தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக முடக்கி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா முழுமையாக நிறைவேற்றும் வரை, ஹோர்முஸ் நீரிணை எக்காரணம் கொண்டும் திறக்கப்படாது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: போருக்காக அமெரிக்கா செலவிட்டது ரூ.3,700 கோடி: செனட் சபையில் அனல் பறந்த விவாதம்!

அமெரிக்க கடற்படை முற்றுகையை விலக்குவது, எண்ணெய் ஏற்றுமதி தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட நிதிச் சொத்துகளை விடுவிப்பது போன்ற ஈரானின் நிபந்தனைகளால் நீரிணையைத் திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த இடியாப்பச் சிக்கலுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணைப் பாதை ஏற்கனவே தங்களது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

ஈரானை வீழ்த்திய பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அதிகாரப்பூர்வமாக அமெரிக்கப் பகுதியாக அறிவிப்பேன் எனப் பேசி வந்த டிரம்ப், தற்போது வரைபடத்துடன் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு சர்வதேச ராஜதந்திர அரங்கில் பெரும் கொந்தளிப்பையும், வளைகுடா நாடுகளில் பதற்றத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share