ஈரான் மக்களை கொல்ல விரும்பவில்லை! போர் ரத்து... ஒப்பந்தம் ஓகே? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
ஈரானில் மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை; அவர்களுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மட்டுமே விரும்புகிறோம்" என்ற அவரது கருத்து உலக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானின் திறனை அமெரிக்கா பலவீனப்படுத்தியுள்ளதாக கூறினார். இருப்பினும், போரை விட பேச்சுவார்த்தை மூலமாக நிரந்தர தீர்வை எட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், "ஈரானுக்கு அணு ஆயுதங்களை உருவாக்க எந்த சூழலிலும் அனுமதி வழங்க முடியாது. அதே நேரத்தில், அந்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பமல்ல. பாதுகாப்பான மற்றும் நீடித்த ஒப்பந்தமே எங்கள் இலக்கு" என்று டிரம்ப் கூறினார்.
இதையும் படிங்க: டிரம்புக்கு எதிராக களமிறங்கிய 25 அமெரிக்க மாகாணங்கள்! சுங்க வரி விவகாரத்தில் வெடித்த சட்டப் போர்
டிரம்ப் தனது உரையில், மிகப்பெரிய ராணுவ தாக்குதல் ஒன்றை அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெறவிருந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக அது இருந்திருக்கும்.
ஆனால் அவர்கள் எங்களை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு பேச்சுவார்த்தை தொடங்கியது. தற்போது நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர்கள் எங்களை மதிக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
ஈரானுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில், முந்தைய அமெரிக்க அதிபர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டதாகவும் டிரம்ப் விமர்சித்தார்.
இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், வெளிப்புற தலையீடுகள் இல்லாவிட்டால் விரைவில் இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புகள், நீண்ட காலமாக பதற்றத்தில் இருந்த அமெரிக்கா–ஈரான் உறவில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகின்றன. பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் உலக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: டிரம்ப் கூறியது பொய்... ஹார்முஸ் ஜலசந்தி திறக்க எந்த ஒப்பந்தமும் இல்லை; அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!