ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!
ஈரானுக்கு எதிரான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பெரும் பின்னடைவாக, அந்நாட்டின் தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ஜோ கென்ட் இன்று தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
ஈரானுக்கு எதிராகத் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போரை எனது மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது. இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்காக நடத்தப்படும் போர் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானால் அமெரிக்காவிற்கு எந்தவிதமான உடனடி அச்சுறுத்தலும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அவர், ஒரு தேவையற்ற போருக்குள் அமெரிக்க வீரர்களைத் தள்ளுவது தவறு எனச் சாடியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதன் சக்திவாய்ந்த லாபிக் குழுக்களின் அழுத்தம் காரணமாகவே டிரம்ப் நிர்வாகம் இந்தப் போரை முன்னெடுத்துள்ளது. இது அமெரிக்காவின் நலனை விடவும் மற்றவர்களின் நலனுக்காக நடத்தப்படும் போர் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எங்களுக்கு யாரும் தேவையில்லை! ஹார்முஸ் விவகாரத்தில் நேட்டோ நாடுகளை சாடிய டொனால்ட் டிரம்ப்!
கடந்த ஆண்டுதான் (2025) டிரம்பால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் ஜோ கென்ட். ஒரு முக்கியமான பாதுகாப்பு அமைப்பின் தலைவர், போரின் நடுவே வெளியேறுவது வெள்ளை மாளிகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பு மற்றும் ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுத் தாக்குதல்கள் காரணமாக ஏற்கனவே மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போருக்கு எதிராக அமெரிக்காவிற்குள்ளேயே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குரல் எழுப்பத் தொடங்கியிருப்பது, டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்கு யாரும் தேவையில்லை! ஹார்முஸ் விவகாரத்தில் நேட்டோ நாடுகளை சாடிய டொனால்ட் டிரம்ப்!