பிரிட்டனில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்! அரசு விதித்த நிபந்தனைகளால் மக்கள் அதிருப்தி!
பொதுவாக இதற்கு 6 முதல் 12 லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு, தேவையற்ற நீர் விரயத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரிசி சமைப்பதற்கு முன்பு பலமுறை கழுவும் பழக்கத்தை குறைக்க வேண்டும் என்ற ஆலோசனை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக பிரிட்டனின் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீர் பயன்பாட்டை குறைப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பிரிட்டனில் அதிக அளவில் வசிக்கும் ஆசிய சமூகத்தினரை கருத்தில் கொண்டு, அரிசியை சமைப்பதற்கு முன்பு 5 முதல் 7 முறை கழுவும் பழக்கம் இருந்தால் அதை குறைக்கலாம் என பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த சமையல் கலைஞர் பிங் கூம்ப்ட்ஸ் வெளியிட்ட வீடியோவில், அரிசியை இரண்டு முறை கழுவினாலே போதுமானது என்றும், ஒவ்வொரு முறை கழுவுவதையும் குறைப்பதன் மூலம் கணிசமான அளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!
மேலும், அரிசி கழுவிய நீரை வீணாக்காமல் செடிகளுக்கு பயன்படுத்தலாம் என்றும், சிலர் அதை முகம் அல்லது தலைமுடியில் பயன்படுத்தும் முறைகளும் இருப்பதாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுபோல, முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு மேற்கொள்ளும் ‘உது’ எனப்படும் தூய்மை சடங்கிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலும் பிரசாரத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இதற்கு 6 முதல் 12 லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு, தேவையற்ற நீர் விரயத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நீர் சேமிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் அரசு அமைப்பான ஆப்வாட் மூலம் சுமார் ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதற்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரிட்டனில் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மூலமாகவே தினமும் சுமார் 300 கோடி லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதாக கூறப்படும் நிலையில், பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டை மட்டும் குறைக்க அறிவுரை வழங்குவது எந்த அளவுக்கு நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, வீட்டு உபயோகத்தில் நீர் சிக்கனத்துடன், பழைய நீர்க்குழாய் கட்டமைப்பில் உள்ள கசிவுகளையும் அரசு நிறுவனங்கள் தீவிரமாக சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா முன்னேறுகிறது! பாக்., திணறுகிறது! அந்நாட்டு அமைச்சரே வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!