×
 

நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலால் தொடங்கிய ஈரான் போர் இரு வாரங்களை எட்டியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்ச் 6, 2026 அன்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கில் தொடரும் போர் மற்றும் தாக்குதல்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இப்பகுதியில் நடக்கும் சட்டவிரோத தாக்குதல்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக பொருளாதாரத்துக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. நிலைமை யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெடித்து விடலாம்" என்று குட்டெரெஸ் கவலை தெரிவித்தார். "போரை உடனடியாக நிறுத்தி, தீவிரமான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு செல்ல வேண்டும். இதுவே ஒரே வழி" என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்து தரப்பினரும் விரோதப் போக்கை கைவிட்டு, சர்வதேச சட்டத்தை மதித்து, பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்!! இந்தியர் மரணம்! ஈராக் கடற்பரப்பில் ஈரான் கோர தாண்டவம்!

ஏற்கனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஈரான் மீது தீர்மானம் 2817 (2026) நிறைவேற்றியுள்ளது. இதில், ஈரான் தனது அண்டை நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படுத்தும் தடைகள், அச்சுறுத்தல்கள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்மானம் 13 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது; சீனா, ரஷ்யா ஆகியவை விலகியிருந்தன.

போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல், அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், பல நாடுகளுக்கு பரவியுள்ள இந்த நெருக்கடி உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டெரெஸின் எச்சரிக்கை, போரை தடுக்க உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க: வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்! ஈரானுக்கு வலுக்கும் கண்டனம்! தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா ஒப்புதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share