×
 

அமெரிக்கா - ஈரானுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்; சுவிட்சர்லாந்தில் ஜூன் 19-ல் கையெழுத்து!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றத்தைத் தணித்து, போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் சுவிட்சர்லாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் போர்ப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) வரும் ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற பர்கென்ஸ்டாக் (Burgenstock) மலைவாழிட ரிசார்ட்டில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கையெழுத்து இயக்கம் நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தீவிர தூதரக முயற்சிகள் மற்றும் சமரச பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எளிதில் அணுக முடியாத பாதுகாப்பான இடம் என்பதாலும் இந்த பர்கென்ஸ்டாக் பகுதி இரு தரப்பு மற்றும் மத்தியஸ்த நாடுகளால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் அனைத்துப் பிரிவுகளிலும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் முக்கியப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாப் ஆகியோர் முன்னிலையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலக அளவில் மிகப்பெரிய எரிசக்திப் பொருளாதாரப் பாதையாகத் திகழும் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் முழுமையாகத் திறந்துவிடப்படும் என்றும், அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகைகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அடுத்த 60 நாட்களுக்குத் தற்காலிகப் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்றும், அந்தப் பக்குவக் காலத்தில் ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் தடைகள் நீக்கம் குறித்த அடுத்தகட்ட இறுதிப் பேச்சுவார்த்தைகள் விரிவாக நடத்தப்படும் என்றும் இரு நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் இந்தத் தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வரவேற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன.

 

இதையும் படிங்க: போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share