மொத்தம் 42 விமானங்கள் க்ளோஸ்! ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு பெரிய நஷ்டம்!
ஈரானுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள் உள்பட 42 விமானங்களை அமெரிக்க இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இதுவரை 42 விமானங்களை இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற ராணுவ நடவடிக்கையில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் அமெரிக்காவும் கணிசமான இழப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 24 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), 7 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 4 எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம், தரைவழித் தாக்குதல் விமானம், ஹெலிகாப்டர் மற்றும் ட்ரைட்டன் ட்ரோன் உள்ளிட்ட மொத்தம் 42 விமானங்கள் சேதமடைந்துள்ளன.
கடந்த மே 12 அன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஒதுக்கீட்டுக் குழு கூட்டத்தில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கான செலவு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக (சுமார் 280 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தப் போர் தொடர்ந்து நீடித்தால் இழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள்!! ஈரானுக்கு ஐ.நா வேண்டுகோள்!
ஈரான் தரப்பில் இருந்து வந்த கடும் பதில் தாக்குதல்கள் அமெரிக்க ராணுவத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. ஆளில்லா விமானங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது அமெரிக்காவின் ராணுவ உத்தியில் மாற்றம் தேவைப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.
இரு தரப்புக்கும் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், சர்வதேச சமூகம் அமைதிப் பேச்சுகளுக்கு வாய்ப்பு கோரி வருகிறது. உலகப் பொருளாதாரத்திலும், குறிப்பாக கச்சா எண்ணெய் விலையிலும் இந்தப் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இழப்புகள் அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சில காங்கிரஸ் உறுப்பினர்கள் போர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகவல் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஈரான் போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப்பின் உத்தி என்ன? அமெரிக்காவுக்கு ஜெர்மனி அதிபர் கேள்வி!