×
 

அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை.. பரபரப்பின் உச்சத்தில் அமெரிக்கா..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பழமைவாத இயக்கமான டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ-வின் இணை நிறுவனரும், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31), உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் (Utah Valley University) நடந்த நிகழ்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார். மாணவர்களுடனான கேள்வி-பதில் அமர்வின் போது கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், அரசியல் வன்முறை குறித்த கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் கிர்க்கின் மரணத்தை உறுதிப்படுத்தி, அவரை “இளைஞர்களின் இதயத்தைப் புரிந்தவர்” எனப் புகழ்ந்து, துக்கம் தெரிவித்தார். மேலும் சார்லி கிர்க் மீதான துப்பாக்கிச்சூடு அரசியல் படுகொலை, அமெரிக்காவிற்கு இருண்ட தருணம் என்றும் சார்லி கிர்க் படுகொலைக்கு காரணமான ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு தண்டிப்பேன் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பரபரப்புக்கு மத்தியில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு!! முடிவுக்கு வருகிறதா உக்ரைன் - ரஷ்யா போர்!!

சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகையில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. மேலும் வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை அமெரிக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என டிரம்ப் அறிவித்தார். கிர்க்கின் மனைவி எரிக்கா மற்றும் இரு குழந்தைகளுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதே போல் சார்லி கிர்க்கை சுட்டுக்கொன்ற நபரை யார் தூண்டியது என்பது எங்களுக்கு தெரியவில்லை, இழிவான வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை; சார்லியின் குடும்பத்தினருக்காகவும், அவரது மனைவி, இரண்டு இளம் குழந்தைகளுக்காகவும் பிரார்த்தனை செய்வோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் நடந்தபோது, கிர்க் திருநங்கைகள் துப்பாக்கி வைத்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், பார்வையாளர்கள் அலறி ஓடியதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். உட்டா மாநில காவல்துறையும், எஃப்.பி.ஐ.யும் விசாரணையைத் தொடங்கியுள்ளன. ஒரு சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழமைவாதிகள் மத்தியில் கிர்க் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தார். அவரது மறைவு மாகா (MAGA) இயக்கத்தில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் இணைந்து இந்த வன்முறையைக் கண்டித்துள்ளனர். கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், “இது வெறுக்கத்தக்க செயல்” என குறிப்பிட்டார்.

இந்த சம்பவம், அமெரிக்காவில் அரசியல் வன்முறை அதிகரித்து வருவதாக எச்சரிக்கும் மற்றொரு நிகழ்வாக அமைந்துள்ளது. கிர்க்கின் மரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
 

இதையும் படிங்க: “இனி வீட்டு வேலை கூட கிடைக்காது” - இந்தியர்கள் தலையில் அடுத்த இடியை இறங்கிய டிரம்ப்... உலக நாடுகளுக்கும் பேரதிர்ச்சி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share