×
 

"ம்"- னா சிறைவாசம்! ஏன்- னா வனவாசம்.. விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்க! கொந்தளித்த விஜய்!!

திமுக ஆட்சியில் கருவறை முதல் கல்லறை வரை அலட்சியமும் ஊழலும் மலிந்து போய் உள்ளதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் இருண்ட தி.மு.க அரசுக்கு வெற்று விளம்பரம் செய்வதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார். விவசாயிகள் வயிற்றில் திமுக அரசு அடிப்பதாக குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

கருவறை முதல் கல்லறை வரை அலட்சியமும் ஊழலும் மலிந்து போன, நிர்வாகத் திறனற்ற விளம்பர மாடல் ஆட்சியாகத்தான் தி.மு.க. அரசு திகழ்கிறது. அதன் காரணமாகவே ஆண்டு முழுதும், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள், ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்டத்திலும் தொடங்கி, தலைநகர் சென்னை வரையிலும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தித் தமிழக அரசை எதிர்த்துத் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அதன் ஒரு பகுதிதான், நெல் விவசாயிகள் வயிற்றில் நேரடியாக அடித்து, அவர்களின் வாழ்வைப் பறித்த நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்ற இறக்க, எடைபோட்டுக் கட்ட, மூட்டைகளாகப் பிரிக்க என அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு. ஒவ்வொரு கட்டமாக விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அதையும் கடந்து, வேறு வழியில்லாமல் லஞ்சமும் கொடுத்து, தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணத்தையும் கேட்டு மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். 811 கோடி ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

மோசடி தி.மு.க அரசு திருடனுக்குத் தேள் கொட்டியது போல் திகைத்துப் போய் இருக்கிறது. இது ஒருபக்கம் என்றால், ம் என்றால் சிறைவாசம்… ஏன் என்றால் வனவாசம்… என்ற அதிகார மமதையில், அடக்குமுறைகளை ஏவி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் துயர் துடைப்போம் என்று உறுதி கொடுத்துவிட்டு, இன்று அந்த விவசாயிகளையே கண்ணீர் விட வைத்திருக்கும் கபட நாடக ஆட்சியாகத் தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

நெல் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம் அவர்களை அந்தப் பொறுப்பில் இருந்து திடீரெனப் பணியிட மாற்றம் செய்தது ஏன்? எட்டுவழிச் சாலைக்காகப் போராடிய அருளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது முதல், விவசாயிகள் தங்கள் தாய் மடியாகக் கருதும் விவசாய நிலங்களைப் பரந்தூர் விமான நிலையத்திற்காகப் பறித்துக் கொண்டு, அந்த விவசாயிகளை ஓலமிடச் செய்தது வரை, ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரோத ஆட்சியாகத்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது.

நெல் விவசாயிகளுக்கு உரிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும். இனி வரும் காலங்களில் முன்பிருந்ததைப் போல், தமிழக அரசே நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும்., அதில் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெறாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: திராவிடம்னா என்ன? ஐடியா இல்ல SKIP பண்ணிடுங்க! பல்பு வாங்கிய இன்ஸ்டா புரட்சியாளர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share