ஹோர்முஸ் நீரிணை மூடலால் இந்தியாவுக்கு பாதிப்பு? பெட்ரோல், டீசல் விலை எகிறுமா?
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்து வரும், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இந்த முடிவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்பதே இந்தியர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வல்லுநர்கள் கூறியதாவது: ஹோர்முஸ் நீரிணையானது, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முதன்மை பாதையாக இது விளங்குகிறது. கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களும் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன.
இதையும் படிங்க: உலக நாடுகளின் அடிமடியில் கை வைத்த ஈரான்.. ஹோர்முஸ் நீரிணை மூடுவதால் உச்சபட்ச பதற்றம்..!
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பயன்பாட்டில் இந்தியா 3வது நாடாக திகழ்கிறது. தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் 40 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகின்றன. தற்போது, இந்தியா 500 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, அதனை சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால், முன்னெச்சரிக்கையாகவே, இந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளது சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் செய்யப்படும் ஒட்டுமொத்த இறக்குமதியை விட ரஷ்யாவிலிருந்து அதிகமான எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
அதாவது, ரஷ்யாவிடம் இருந்து தினமும் 20 லட்சம் பீப்பாய்கள் முதல் 22 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 35 சதவீதமாகும். ரஷ்யாவில் இருந்து மே மாதத்தில் 19 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் அரசியல் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த சில ஆண்டுகளாக நமது இறக்குமதியை நாம் பன்முகப்படுத்தியுள்ளோம். எனவே, நமது எரிபொருள் இறக்குமதியின் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவது இல்லை.
நமது நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் பல வாரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பை வைத்துள்ளன. மேலும் பல வழித்தடங்களில் இருந்து தொடர்ந்து எரிசக்தி விநியோகம் நடந்து வருகிறது. நமது குடிமக்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஈரான்-இஸ்ரேல் மோதல்.. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு செக்..?