"ஈரான் தாக்கினால் விடமாட்டோம்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!
நாங்கள் பதிலடி கொடுத்தால் ஈரான் இதுவரை கண்டிராத மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடிப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் மிகவும் கடுமையான எச்சரிக்கை ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
ஈரான் இன்று மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறி வருகிறது. அவர்கள் அப்படிச் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிக மோசமானத் தாக்குதலை (Force that has never been seen before) நாங்கள் நடத்துவோம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Qalibaf), "அமெரிக்காவும் இஸ்ரேலும் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டன; இதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்" என்று கூறிய சில மணி நேரங்களிலேயே ட்ரம்ப் இந்தப் பதிலை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் வான்வழி மூடல்: சென்னை விமான நிலையத்தில் 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!
முன்னதாக ஆற்றிய உரையில், ஈரானிய மக்கள் தங்களது கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிய இதுவே சரியானத் தருணம் என்றும், அமெரிக்கா ஈரானிய மக்களுக்குத் துணையாக இருக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய "ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி" (Operation Epic Fury) மூலம் ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்கள் ஏற்கனவே கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரானின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலால், உலக நாடுகள் அனைத்தும் அமைதி காக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், ட்ரம்ப்பின் இந்தத் திட்டவட்டமான எச்சரிக்கை மத்தியக் கிழக்கில் போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!