பிரிட்டிஷ் அரசுக்கே கடன் கொடுத்த இந்தியர்?! 109 ஆண்டுகளுக்கு பின் வட்டியுடன் திரும்ப கேட்கும் வாரிசுகள்?!
முதலாம் உலகப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த 'போர்க் கடன்' வாங்கப்பட்டதாக அந்தப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.
போபால்: மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், 109 ஆண்டுகள் பழைய ஒரு வரலாற்று கடன் விவகாரத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர். 1917ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் சமயத்தில், பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா (Seth Jumma Lal Ruthia) பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
இந்தத் தொகை 'இந்திய போர் கடன்' (Indian War Loan) என்ற பெயரில் போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக வாங்கப்பட்டது. போர் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இந்தக் கடன் எடுக்கப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடன் குறித்த ஆவணங்கள் குடும்பத்தினருக்கு இருந்தாலும், அசல் சான்றிதழ்கள் மறைந்திருந்தன. சேத் ஜம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் ருதியா (Vivek Ruthia), தந்தை மறைவுக்குப் பின் பழைய ஆவணங்கள், உயில் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, ஜூன் 4, 1917 தேதியிட்ட அசல் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க: ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் ராஜேந்திர பாலாஜி! நிபந்தனைகளை தளர்த்தியது சுப்ரீம் கோர்ட்!
இதில் "சேத் ராமகிஷன் ஜஸ்கரன் ருதியா நிறுவனத்தின் சேத் ஜம்மாலால் ருதியா, இந்திய போர் கடனுக்கு 35,000 ரூபாய் சந்தா அளித்து அரசு மற்றும் பேரரசுக்கு விசுவாசத்தை காட்டினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது போபால் அரசியல் அதிகாரியாக இருந்த W.S. டேவிஸ் கையெழுத்திட்டுள்ளார்.
1917இல் 35,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அன்றைய தங்க விலை அடிப்படையில் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களைத் தொடும் என குடும்பத்தினர் கணக்கிட்டுள்ளனர். சர்வதேச சட்டப்படி, ஒரு இறையாண்மை கொண்ட நாடு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டியது கட்டாயம் என்பதால், ருதியா குடும்பத்தினர் பிரிட்டன் அரசுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப தயாராகி வருகின்றனர். வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ருதியா குடும்பம் ஒருகாலத்தில் சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிக செல்வாக்கு மிக்க குடும்பமாக இருந்தது. இன்றும் சீஹோர் நகரின் 20-30 சதவீத குடியிருப்புகள் இவர்களின் நிலங்களில்தான் உள்ளன. தற்போது விவசாயம், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்பது குடும்பத்தினருக்கு புதிய கண்டுபிடிப்பு. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி, வரலாற்று நீதி கோரும் கோரிக்கையாக மாறியுள்ளது. பிரிட்டிஷ் அரசு இதற்கு எப்படி பதிலளிக்கும் என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: திரும்பி வராத விருப்பமனுக்கள்!! மிரட்டும் மாவட்ட செயலாளர்கள்!! அதிருப்தியில் தவெக தொண்டர்கள்!