TCS அறிவித்த அதிரடி பணி நீக்கம்.. சந்தை மதிப்பு ரூ.28,149 கோடி சரிவு..!!
பங்குச்சந்தையில் டி.சி.எஸ் பங்குகள் கடந்த 2 நாட்களாக கடுமையாக சரிந்து வருகின்றன.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாகவும், உலகளவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 1968-ல் டாடா குழுமத்தால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. 2025-ல், TCS அதன் 30 பில்லியன் டாலர் வருவாய் மைல்கல்லை எட்டியது.
இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம், உலகளவில் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களில் அதன் சந்தை மதிப்பு ரூ.28,148.72 கோடி குறைந்து ரூ.11,05,886.54 கோடியாக சரிந்துள்ளது. இந்த பணிநீக்கம், நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை (12,261 பேர்) பாதிக்கும், இதில் பெரும்பாலானவர்கள் மத்திய மற்றும் மூத்த பதவிகளில் உள்ளவர்கள். இந்த அறிவிப்பு, நிறுவனத்தின் பங்கு விலையில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 12,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் TCS.. வெளியான பகீர் காரணம்..!!
நேற்று டி.சி.எஸ். பங்கு மும்பை பங்குச் சந்தையில் (BSE) 0.73 சதவீதம் சரிந்து ரூ.3,056.55 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் (NSE) 0.72 சதவீதம் குறைந்து ரூ.3,057 ஆகவும் முடிவடைந்தது. நேற்று முன்தினம் மட்டும் பங்கு விலை 2 சதவீதம் சரிந்து, இரண்டு நாட்களில் மொத்தம் 2.48 சதவீத இழப்பை சந்தித்தது.
டி.சி.எஸ். இந்த முடிவை, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சந்தை விரிவாக்கத்தை மையமாகக் கொண்டு "எதிர்காலத்திற்கு தயாரான நிறுவனமாக" மாறுவதற்கான உத்தியின் ஒரு பகுதியாக கூறியுள்ளது. பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு முறையான பலன்கள், மறுவேலைவாய்ப்பு உதவி, ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்திய ஐ.டி. துறையில் மந்தமான வளர்ச்சி, உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, டி.சி.எஸ். உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஒற்றை இலக்க வருவாய் வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளன. இந்த பணிநீக்க அறிவிப்பு, தொழில்நுட்பத் துறையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.சி.எஸ். நிர்வாகம், உலகளாவிய சந்தைகளில் 2026-ஆம் ஆண்டு வளர்ச்சி மேம்படும் என நம்பிக்கை தெரிவித்தாலும், தற்போதைய சவால்கள் பங்கு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: 12,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் TCS.. வெளியான பகீர் காரணம்..!!