12,000 முறை ரெய்டு!! 15,000 சிலிண்டர் பறிமுதல்! கேஸ் சிலிண்டர் பதுக்கல்?! மத்திய அரசு அதிரடி!
''நாடு முழுதும் 12 ஆயிரம் முறை சோதனை நடத்தப்பட்டு 15 ஆயிரம் பதுக்கல் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசு பதுக்கல் மற்றும் கருப்புச் சந்தைக்கு எதிராக பெரும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு 15,000-க்கும் அதிகமான பதுக்கல் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை தெரிவித்துள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கூடுதல் செயலர் சுஜாதா சர்மா இது குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். “டெல்லியில் மட்டும் 600 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் 450 சோதனைகள் நடத்தப்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 564 சோதனைகள் நடத்தப்பட்டு பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு சமையல் மற்றும் வணிக ரீதியிலான சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் 1,200 சோதனைகள் நடத்தப்பட்டு 1,800 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: தலைவலி கொடுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? களத்தில் இறங்கிய மத்திய அரசு!! பறக்கும் உத்தரவு!
இதுதவிர எண்ணெய் நிறுவனங்கள், எல்பிஜி விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பதுக்கல், கருப்புச் சந்தை, வணிக சிலிண்டர்களை வீட்டு உபயோகத்துக்கு தவறாக பயன்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பதுக்கப்பட்ட சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியேறி, சாதாரண மக்களுக்கு சிலிண்டர் கிடைப்பது சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினை, உலக சந்தையில் எண்ணெய் விலை ஏற்றம் ஆகியவை தொடரும் நிலையில், உள்நாட்டில் பதுக்கலை தடுப்பதன் மூலம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கை மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எங்களுக்கு யாரும் தேவையில்லை! ஹார்முஸ் விவகாரத்தில் நேட்டோ நாடுகளை சாடிய டொனால்ட் டிரம்ப்!